ஒத்த பனைமரம்
ஆறும் பொம்பளப் பிள்ளைகளா
அரசனும் ஆண்டியாவான்னாங்க
அப்பா ஒன்னும் அரசனும்
அல்ல
ஆண்டியாகவும் இல்ல!
கூலி வேலை
பார்த்த அப்பா
குபேரனாகாவிட்டாலும்
குடும்பஸ்தனாகயிருந்தாரு......
இரவும் பகலும் பாராது
காடு கழனி அலைந்து
வீடு தனை சேர்த்தார்அப்பா!
போன இடத்துல நின்ன
இடத்துல
டீயும் வடையும் சாப்பிடுவாரு
உழைக்கிற மனுசன் சாப்பிட்டு போகட்டுமே
என நினைப்பா அம்மா!
அஞ்சு ரூபாய்க்கு வாழைப்பழம்
வாங்க
அம்பது முறை யோசிப்பா!
இருபது ரூபாய்க்கு பூ
வாங்கி
இருபது முறை வைக்க
கணக்குபோடுவா!
அது பிடிக்கும்
இது பிடிக்கும்
மனசுக்குள்ள ஆசையை அடக்கிவைப்பா!
வாயை கட்டி வைப்பா!
இது வீட்டுக்காரருக்கு
இது பிள்ளைகளுக்கு என
பார்த்து பார்த்து செஞ்சவளுக்கு
தனக்கென வரும்போது
பிறகு பார்ப்போம்
என்பாள்!
நல்லநா பொழுது எல்லாத்துக்கும்
துனி வாங்கிட்டு
அவங்க போட்டத
பார்த்து ரசிப்பா
தான் பட்டினியாக இருந்து
பிள்ளைக பசி பொறுக்க
மாட்டா!
பக்கத்து கடைக்காரர் டூருக்கு
ஆள் சேர்க்க கூப்பிடறப்ப
மொத
பொண்ணு கல்யாணம்
முடியட்டும் என்பாள்
அடுத்தடுத்த பிள்ளைக கல்யாண வயசுல
அவ ஆயுளும் மொத்தமா
கரஞ்சிபோச்சு
அப்பாடா என மூச்சுவிடு
வேளையில
அப்பா படுத்த படுக்கையாகி
அடுத்த கடமை கட்டிப்போடுது!
தெற்க வடக்க அறியாதவ
பிள்ளைகளுக்காக புருஷனுக்காக வாழ்ந்தவ
உடம்பும் உயிரும்
ஊசலாடுது தள்ளாடுது
உயிரும் தசையும் கொடுத்து
உருவம் தந்தவ
உரு தெரியாமா போயிட்டா.........
குடும்பமே கோயிலுனு
வேற கோயிலு அறியாதவ...............
நல்லதுதான் கிடைக்கும்னு
நாலுபேரு சொன்னாங்க
நாதியத்துதா போனா
பொம்பள பிள்ளைகள
பெத்தவ
மக்கள பெத்த மகராசின்னாங்க
ராசியத்தவளாஆயிட்டா.................
எல்லாரும் அம்மாவை பார்க்கல
அம்மா காது,மூக்கத்தா
பார்த்தாங்க!
இது எவ்வளவு தேறும்னு...............
உடம்பு தேறுமானு பார்க்கல
யாரும்
கட்டிலோடு கட்டிலா ஒட்டியிருக்கும்போதும்
நீங்க நல்லாயிருக்கீங்களானு கேட்பா
வந்த பிள்ளைகளுக்கு
கஞ்சிதண்ணி ஊத்தமுடியலேனு
மனசு கிடந்து
துடிக்குது
அந்த சீவனுக்கு.....
பிள்ளைக வயிறு
நிறைஞ்சா
தா வயிறு நிறைஞ்ச
மாதிரி என்பாள்...........
இப்பதான் புரியுது அவளுக்கு
தாயானாலும் பிள்ளையானாலும்
வயிறு
வேற வேறனு
வயோதிகத்துல ஒத்தையா
நிக்கிறா
ஒத்த பனைமரமா!....
ஆலம் விழுதுகளா
ஆயிரம் உறவுகள் இருந்தென்ன!
பாசம் இல்லாததால
பசைற்று போனாளே!
காசு இல்லாததனால
கடனேனு ஆயிட்டாளே!....
ஓடக் கரையோரம்
ஒத்த பனைமரமா!
ஒத்தயா நிக்கிறாளே!
****